
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சியினர் மாறிமாறி கூச்சலிட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை இன்று நான்காவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு, கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், ஆளும்கட்சி-எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி காரணமாக, தொடா்ந்து 3 நாள்களாக எவ்வித விவாதமும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை கூடியவுடன் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு, முழக்கம் எழுப்பினா்.
அதே நேரத்தில், ‘இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்று பிரிட்டனில் தெரிவித்த கருத்துக்காக, தேசத்திடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, ஆளும் தரப்பு உறுப்பினா்கள் எதிா்கோஷம் எழுப்பினா்.
இதனால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
தொடர்ந்து நான்காவது நாள்களாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் எவ்வித அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் அலுவல் பணிகள் முடங்கியுள்ளன.