மும்பை:
துபையில் கடந்த சனிக்கிழமை இரவு காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குக் கொண்டு வருவதில் மேலும் சிக்கலும் தாமதமும் நீடிக்கிறது.
இதுகுறித்து இந்திய தூதரகத்திடம் கறார் காட்டிய துபை போலீஸ், மேலும் ஒரு கிளியரன்ஸுக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளது. இதுகுறித்து தகவல் அளித்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதரக அதிகாரி நவ்தீப் சூரி, ஸ்ரீதேவியின் உடலை விடுவிப்பதில், எந்த மாதிரியான கிளியரன்ஸுக்கு துபை போலீஸ் காத்திருக்கிறது என்ற தகவலைக் கூற மறுத்துவிட்டார்.
இந்த விவகாரத்தை விசாரித்த துபை போலீஸார், ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருமண விழாவுக்கு வந்திருந்த ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியலறையில் மயங்கிய நிலையில் விழுந்து உயிரிழந்தார் என்றும், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் கூறியது.
மேலும், துபைக்கும் மும்பைக்கும் அடுத்தடுத்து பறந்து சென்று வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் இந்த வழக்கை முதலில் விசாரித்த துபை போலீஸாரும், பின்னர் விசாரணைக்கு ஏற்ற துபை நீதிமன்ற அரசு வழக்கறிஞரும் தீவிரமாக விசாரித்துள்ளனர். இதை அடுத்து போனி கபூரின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று எம்பால்மிங் செய்யப்படுவதாக, கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதரக அதிகாரி நவ்தீப் சூரி, ஸ்ரீதேவியின் உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் நீடிப்பதாகக் கூறினார். இது குறித்து அவர் தெரிவித்த போது, இது போன்ற விவகாரங்களில், உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில், சட்ட நடைமுறைகளின் படி சாதாரணமாக 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தார்.
மேலும், ஸ்ரீதேவி உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சந்தேகங்கள் குறித்து கருத்து தெரிவித்த நவ்தீப் சூரி, ஒரு புகழ்பெற்ற நடிகை திடீரென மறைந்ததால் அது குறித்து தகவல் பெற்று வெளியிடுவதில் ஊடகங்களுக்கு இருக்கும் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பி, செய்திகளைப் பரப்புவது எந்த வகையிலும் உதவாது. நாங்கள் இந்த மரணத்தில் எழுந்துள்ள விவகாரத்தை வல்லுநர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்களே இதற்கு பொறுப்பேற்பார்கள் என்று கூறியிருந்தார்.