பெங்களூர்
பெங்களூர், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சைக்கோ ஜெய்சங்கர்’ இன்று அதிகாலை கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டான். 30 பெண்களைப் பலாத்காரம் செய்து, 15 கொலைகள் செய்த குற்றவாளிதான் இந்த சைக்கோ ஜெய்சங்கர்.
இரு தினங்களுக்கு முன் அதிக பாதுகாப்புகள் நிறைந்த பரப்பன சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிக்க முயன்று போலீஸாரால் பிடிக்கப்பட்டான். இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஜெய்சங்கர், பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
தமிழகத்தில், சேலம் மாவட்டம், கன்னையாபட்டணம் கன்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவன் ஜெய்சங்கர். லாரி ஓட்டுநரான இவன் தொடர்கொலைகளைச் செய்துள்ளான். தொடர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொடூர குற்றவாளியாக மாறியவன். திருமணமாகி மனைவியும் 3 மகள்களும் இருந்த நிலையில் அவனது குற்றச் செயல்கள் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டன.
ஜெய்சங்கரின் நோக்கம் முழுவதும் சேலம், நாமக்கல், பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்வதுதான். மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சில நேரங்களில் அவர்களையும் கொலை செய்துள்ளான்.
கடந்த 2009ஆம் ஆண்டு, பெண் போலீஸ் கான்ஸ்டபிளை பலாத்காரம் செய்த குற்றத்தில் அதே ஆண்டு ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டான். 2011ல் தர்மபுரி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸிடம் இருந்து ஜெய்சங்கர் தப்பினான். இவனை தப்பவிட்ட குற்றத்துக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் சின்னச்சாமி அடுத்த 2 நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கர்நாடக போலீஸாரால் கடந்த 2011 மே 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில் 2013 செப். 1ல் இந்த சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிச் சென்றான். இரு அடுக்கு கொண்ட 30 அடி உயர சுவர், மின் வேலி அனைத்தையும் தாண்டி ஜெய்சங்கர் தப்பித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சிறையின் பூட்டுக்கு போலி சாவி தயாரித்து, போர்வைகளை கயிறுபோல் திரித்து ஜெய்சங்கர் தப்பித்ததும், அவனுக்கு உதவியாக இருந்த 11 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன்பின் மீண்டும் கர்நாடக போலீஸாரால் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டு பரப்பனா அக்ரஹார சிறையில் தனி செல்லில் அடைக்கப்பட்டதும் தனிக்கதை.
இந்நிலையில், மீண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து தப்பிக்க ஜெய்சங்கர் முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போலீஸார் ஜெய்சங்கரை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சிறையில் இருந்த ஜெய்சங்கர், பிளைடோல் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றான்.
சிறையில் அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அவனுக்கு முதலுதவி செய்து, அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10க்கு ஜெய்சங்கர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது .