மக்களவையில் இன்று நடைபெற்ற புகைப் பொருள் வீச்சு சம்பவத்தை அடுத்து இனி பார்வையாளர் மாடத்துக்கான அனுமதிச்சீட்டு வழங்குவதை நிறுத்தப் போவதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று மதியம், சபை நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென கீழே குதித்த இருவர் கோஷமிட்டு கொண்டே மக்களவைத் தலைவரை நோக்கிச் சென்றனர். அவர்கள் தங்கள் ஷூவில் மறைத்து வைத்திருந்த காஸ் சிலிண்டரில் இருந்து வண்ணப் புகை வெளியேறச் செய்தனர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது.
அவை உறுப்பினர்களை பீதிக்கு உள்ளாக்குவதுதான் அவர்களின் நோக்கம் என்று தெரிகிறது. இச்சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வேறு சில உறுப்பினர்கள் அந்த இருவரையும் துணிந்து மடக்கிப் பிடித்து அங்கு விரைந்து வந்த சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் நடந்த அதே நேரம் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷமிட்டபடி புகை குண்டுகளை வீசினர். அவர்களும் காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் புதுதில்லி துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
மக்களவையின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்ற, சாகர் சர்மா, மனோரஞ்சன் எனப்படும் இரு நபர்களும் பார்வையாளர்களாக உள்ளே சென்று சபை நடவடிக்கைகளை காண, எம்.பி.க்களின் பரிந்துரையில் வழங்கப்படும் அனுமதிச்சீட்டுக்களைப் பெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, பார்வையாளர் மாடத்தில் செல்பவர்களுக்கான அனுமதிச் சீட்டு வழங்குதலை நிறுத்த அவைத்தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட புதுதில்லியில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவைத்தலைவர் ஓம்பிர்லா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்து உரிய அறிக்கையாக தர வேண்டும் என அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் எம்பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும் . எம்பி.,களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை.
சோதனையிட ஸ்கேன் மிஷன் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பொருத்தப்படும். பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும்.
நாடாளுமன்ற அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் தனி பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் கால தாமத்துடன் வந்தால் அவர்கள் அதற்கான தனி பாதை வழியாக வரவேண்டும்.
மக்களவை மற்றும், மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்