- Ads -
Home கட்டுரைகள் குடியுரிமை திருத்தச் சட்டம்; அப்படி என்னங்க இருக்கு இதுல..?!

குடியுரிமை திருத்தச் சட்டம்; அப்படி என்னங்க இருக்கு இதுல..?!

Citizenship Amendment Act; What's wrong with this..?!

சர்ச்சைக்கு அப்பால்: குடியுரிமை திருத்தச்  சட்டம் குறித்த ஒரு தனிப் பார்வை

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) டிசம்பர் 2019 இல் நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்தியாவில் பல்வேறு சர்ச்சைக்கு உரிய விவாதங்களை தூண்டியதுடன், பல்வேறு போராட்டங்களுக்கும் வித்திட்டது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து அவதிப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த சட்டம், ஆதரவையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து சற்று விலகி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனித்து அணுகுவதும், அதற்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்துள்ள தவறான தகவலைக் களைவதும் முக்கியம்.

CAA மற்றும் NRC தொடர்பான சட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை அவிழ்க்கவும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு நியாயமான தீர்வுக்கு வழிவகுக்கவும் தகவலறிந்த விவாதங்களை வளர்ப்பது அவசியம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) புரிந்து கொள்வதற்கு, அதை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து பிரித்துப் பார்ப்பது அவசியம்.

CAA மற்றும் NRC தொடர்பான பல தவறான தகவல்கள் 2019 ஆம் ஆண்டு குழப்பமான சூழநிலையை ஏற்படுதியதுடன் மட்டுமில்லாமல் பொதுமக்களை வீதிகளில் இறங்கி போராடவும் வைத்தது.

ALSO READ:  தீபாவளி அன்று ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என ஏன் கேட்கிறோம்?

முக்கியமாக… CAA மற்றும் NRC வெவ்வேறு என்பதை நினைவில் கொள்வது இன்றியமையாதது. இரண்டையும் ஒன்றிணைப்பது அவற்றின் உண்மையான நோக்கத்தை மறைத்துவிடும்.

CAA பற்றிய தவறான புரிதலே 2019 ஆம் ஆண்டு போராட்டத்துக்கு வழிவகுத்தது. சரி அப்படி என்றால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்படி என்னதான் உள்ளது? இதைத் தெரிந்து கொள்வதற்கும், CAA பற்றிய தவறான கண்ணோட்டத்தைப் போக்கவும் சரியான விவாதங்கள் அவசியத் தேவை!

இந்தியா, ஒரு வலிமையான இந்து மத பெரும்பான்மை மக்களைக் கொண்ட நாடு என்பது மட்டுமல்ல, அண்டை நாடுகளில் இருந்து ஒடுக்கப்பட்ட, அந்நாடுகளில் இருக்கும் மத சிறுபான்மையினரின் சரணாலயமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதும் தான் இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்!

CAA – குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று! இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் எழுகிறது.

காரணம், நம் நாட்டைச் சுற்றிலும் இருப்பவை, இந்தியாவில் இருந்து மத அடிப்படையில் பிரிந்து சென்ற நாடுகள். குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை இந்தியாவில் இருந்து முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளை ஒருங்கிணைத்துக் கோரி தனிநாடாகப் பெறப்பட்டவை.

ALSO READ:  டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!

அந்த வகையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் நாடுகள் ஆனவற்றில், அங்கிருந்த மத சிறுபான்மை மக்களான இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்ஸிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட மக்களை அந்நாடுகள் அரவணைத்துக் காத்திருக்க வேண்டும். அந்த நாடுகள் அவ்வாறு அம்மக்களை தங்கள் நாட்டவர் என்று எண்ணாமல், மத ரீதியில் அணுகியதால், அவர்களின் மத சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க அவர்கள் அந்நாடுகளை விட்டு, பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்து குவிகிறார்கள். அம்மக்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு வாழ்க்கைக்கான மண் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகள் என பரவலாக இஸ்லாமிய மதப் பெரும்பான்மை நாடுகளாக இருக்கும் சூழலில், அவ்வாறு அடைக்கலம் தேடிச் செல்லும் அண்டை நாடுகளின் மத சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க இந்தியாவே ஒரே புகலிடமாக இருக்கிறது. எனவே, இதில், முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்பது இயல்பான புரிந்துணர்வுதான்!

இதில் முஸ்லீம்களைச் சேர்க்காதது இந்திய சமூகத்திற்குள் அவர்களை ஓரங்கட்டுவதற்கான முயற்சி என்பதல்ல, மாறாக அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள், அந்நாடுகளின் சிறுபான்மை சமூகத்தவரைப் போன்ற அதே அளவிலான துன்புறுத்தலை எதிர்கொள்ளாதவர்கள் என்பதை வெளிப்படுத்துவதே ஆகும்!

அதேநேரம், இந்தியாவில் முஸ்லீம்களுக்கு குடியுரிமைக்கான மாற்று வழிகள் வழங்கப்படுகின்றன என்பதை முக்கியமாக வலியுறுத்திச் செல்ல வேண்டியது அவசியம்!

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை!

அண்டை நாடுகளில், குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய பிரச்னையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகுவது மிகவும் அவசியம்.

இந்த நாடுகளில் மதமாற்றங்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளும்  அதிகமாக உள்ளதால் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மதமாற்றம் தொடர்பான அட்டூழியங்களை எதிர்கொண்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அடைக்கலம் அளித்து, இந்தியாவில் சிறந்த வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குவதற்கு CAA முயற்சிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சிக்கல்களுடன் இந்தியா போராடும் நிலையில், அதை நுணுக்கமான அணுகுமுறையுடன் அணுகுவது மிகவும் முக்கியம். இந்தச் சட்டத்தை தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உடன் தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்க்க வேண்டும்,

மேலும் தவறான கருத்துகளைப் போக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட இந்து சிறுபான்மையினருக்கு புகலிடமாக இந்தியா விளங்குவதை அங்கீகரிப்பது இன்றியமையாதது.

தவறான கருத்துகளைக் களைந்து சரியான தகவல்களுடன் விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதன் உண்மையான நோக்கம் மற்றும் கோட்பாடுகளுடன் அமல்படுத்த முடியும். அந்த வகையில், மக்களுக்கு புரிந்துணர்வு ஏற்படச் செய்வதே காலத்தின் கட்டாயம்.

குடிமக்களுக்கான சம வாய்ப்பு, சம நோக்கு என்பதில் உறுதியாக செயல்படும் இந்தியாவின் அணுகுமுறைக்கு இதன் குடிமக்களும் ஒத்துழைக்க வேண்டியது மட்டுமே, அனைவரும் அமைதியுடன் வாழ்வதற்கான வழியாகவும் அமையும்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version