கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஷாகின் ஜெகான் என்ற முஸ்லீமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு முன் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதுடன் தனது பெயரையும் ஹதியா என்று மாற்றி கொண்டார்
இந்த நிலையில் இந்த திருமணம் செல்லாது என்று ஹதியாவின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஹதியாவின் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது
இந்த தீர்ப்பை எதிர்த்து ஹதியா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
அதன்படி இன்று சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பில், ‘தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியாவுக்கு உரிமை உண்டு என்றும் ஹதியா திருமணம் செல்லாது என அறிவிப்பதற்கு கேரள உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹாதியா, ஷாகின் ஜெகான் இடையேயான திருமணம் செல்லும் என்றும் தெளிவுபட அறிவிக்கப்பட்டது.