தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை அண்ணா காலத்திலேயே இருந்தது. தற்போது மீண்டும் திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தாலும் தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சி இல்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுவை மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு கோஷம் அதிகம் உள்ளது. இந்த நிலையில் தற்போது திடீரென தென் மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றன. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தென் மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற கோரிக்கை வந்தால் திமுக அதை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். இது சாத்தியமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
திராவிட நாடு என்று இவர்கள் குறிப்பிடும் இந்த ஐந்து மாநிலங்கள் முதலில் ஒற்றுமையாக இருக்கின்றதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்சனை தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் உள்ளது. ஆந்திராவில் இரு பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட வேறுபாட்டால்தான் தெலுங்கானா பிரிந்தது. தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் முல்லை பெரியாறு உள்பட பல பிரச்சனைகள் உள்ளது. இவ்வாறு இந்த ஐந்து மாநிலங்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது பாஜக எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே வைத்து ‘திராவிட நாடு’ என்பதை கொண்டு வர முடியுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் தற்போதைய புதிய கட்சிகள் திராவிடம் என்ற சொல்லை கட்சியின் பெயராக வைப்பதையே தவிர்த்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை இதற்கு சான்று. திராவிடம் பெயரில் கட்சி ஆரம்பித்த வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டனர். அதிமுகவும் விரைவில் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திராவிடம் என்ற சொல்லை கடந்த ஐம்பது ஆண்டுகளாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தது போதும், இனி திராவிடமே வேண்டாம் என்று தான் பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது.