மோடியின் மனதின் குரல் மனதின் குரல் (42ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள் : 25.03.2018
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ராமநவமி புண்ணிய தினம். இந்த புனிதமான நாளன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். வணக்கத்திற்குரிய அண்ணலின் வாழ்க்கையில் ‘ராம் ராம்’ என்பதன் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் காண முடிந்தது.
கடந்த நாட்களில் ஜனவரி 26ஆம் தேதியன்று ASEAN-ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் அனைத்து தலைவர்களும் இங்கே வந்த வேளையில், தங்களுடன் கலாச்சாரக் குழுவைக் கொண்டு வந்திருந்தார்கள்; அதிக பெருமிதமளிக்கும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நாடுகள், இராமாயணத்தையே நம்மனைவருக்கும் முன்பாக வழங்கினார்கள் என்பது தான். அதாவது இராமரும், இராமாயணமும், பாரதத்தில் மட்டுமல்ல, உலகின் இந்தப் பகுதியிலிருக்கும் ஆசியான் நாடுகளில், இன்றும்கூட அதே அளவுக்கு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நான் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இராமநவமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையைப் போலவும் இந்த முறையும், உங்களனைவரின் அனைத்துக் கடிதங்களும், மின்னஞ்சல்களும், தொலைபேசித் தகவல்களும், கருத்துக்களும் மிகப்பெரிய அளவில் கிடைத்திருக்கின்றன. கோமல் டக்கர் அவர்கள் MyGovஇல் – ஆன்லைன் முறையில் சம்ஸ்க்ருத படிப்புக்களைத் தொடங்குவது தொடர்பாக நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்; அதை நான் படித்தேன். கணிப்பொறித்துறையைச் சேர்ந்தவர் என்பதோடு கூடவே, சம்ஸ்க்ருதத்தின் மீது தங்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட துறை இது தொடர்பாக செய்துவரும் முயற்சிகள் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறேன். மனதின் குரலைக் கேட்கும், சம்ஸ்க்ருதம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவோர் அனைவரிடமும் நான் செய்து கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், நீங்கள் கோமல் அவர்களின் கருத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்பது தான்.
பிஹார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் (B) பராகர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஷ்யாம் குமார் அவர்களே, NarendraModiAppஇல் தாங்கள் எழுதியிருக்கும் கருத்துக்களை நான் படித்தேன். நிலத்தடிநீர் மட்டம் வீழ்ச்சி கண்டுவருவது குறித்து தாங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள், கண்டிப்பாக இது மகத்துவம் வாய்ந்த விஷயம் தான்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஷகல் சாஸ்திரி அவர்களே, உங்களின் சொற்களில் அழகான கவிதைநயம் சொட்டுகிறது; ஆயுஷ்மான் பாரதம் என்பது ஆயுஷ்மான் பூமி இருந்தால் மட்டுமே ஏற்படும்; நாம் வசிக்கும் இந்த பூமி குறித்த சிந்தனை அனைவருக்கும் உண்டானால் தான் ஆயுஷ்மான் பூமி ஏற்படும் என்று எழுதியிருக்கிறீர்கள். கோடைக்காலத்தில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அருந்த நீர் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஷகல் அவர்களே, உங்கள் உணர்வுகளை நான் அனைத்து நேயர்களிடத்திலும் கொண்டு சேர்க்கிறேன்.
யோகேஷ் பத்ரேஷா அவர்கள் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? இந்த முறை உடல் ஆரோக்கியம் குறித்து இளைஞர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று aஅவர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார். ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது நமது இளைஞர்கள் உடல்ரீதியாக பலவீனமாக இருப்பதாக அவர் கருதுகிறார். யோகேஷ் அவர்களே, இந்தமுறை நான் உடல்நலம் குறித்து அனைவருடனும் விரிவாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் – Fit India பற்றிப் பேசுகிறேன். இளைஞர்களான நீங்கள் அனைவருமாக இணைந்து, Fit India தொடர்பான இயக்கத்தை செயல்படுத்தலாம்.
கடந்த தினங்களில் ஃப்ரான்ஸ் நாட்டு குடியரசுத் தலைவர் நம் நாட்டுக்கு வருகை புரிந்த போது காசிக்குச் சென்றிருந்தார். அந்த யாத்திரையின் காட்சிகள் அனைத்தும் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன, தாக்கத்தை உருவாக்கவல்லதாக அமைந்திருந்தன என்று வாராணசியின் ப்ரஷாந்த் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த அனைத்துப் புகைப்படங்கள், அனைத்துக் காணொளிகள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ப்ரஷாந்த் அவர்களே, பாரத அரசு, அன்றே சமூக வலைத்தளங்களிலும், NarendraModiAppஇலும் இதைப் பகிர்ந்து விட்டார்கள். இனி தாங்கள் அவற்றை like செய்யுங்கள், retweet செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையைச் சேர்ந்த அனகா, ஜயேஷ், இன்னும் ஏராளமான குழந்தைகள், Exam Warrior புத்தகத்தின் பின்புறத்தில் காணப்படும் gratitude cards-நன்றி அட்டைகள் மீது அவர்கள், தங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை எழுதி எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அனகா, ஜயேஷ், மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், உங்களது கடிதங்களைப் பார்த்தவுடன் எனது அன்றைய நாளுடைய அனைத்துக் களைப்பும் பகலவனைக் கண்ட பனிபோல மறைந்தே போனது.
இத்தனை கடிதங்கள், இத்தனை தொலைபேசி அழைப்புக்கள், கருத்துக்கள், இவற்றிலிருந்து என்னால் படிக்க முடிந்தவற்றில், நான் கேட்க முடிந்தவற்றில், அவற்றில் காணப்படும் பல விஷயங்கள் என் மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி மட்டுமே சொல்ல வேண்டுமென்றால் நான் மாதக்கணக்கில் சொல்ல வேண்டியிருக்கும்.
இந்த முறை பெரும்பாலான கடிதங்களைக் குழந்தைகள் எழுதியிருக்கிறார்கள், அவர்கள் தேர்வுகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். தங்கள் விடுமுறைத் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடையில் விலங்குகள்-பறவைகளுக்கான நீர் குறித்து கவலை வெளியிட்டிருக்கிறார்கள். விவசாயிகளின் விழாக்கள், விவசாயம் தொடர்பாக நாடுமுழுவதிலும் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து விவசாய சகோதர சகோதரிகளிடமிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன.
நீர்சேமிப்பு குறித்து சில குடிமக்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வந்திருக்கின்றன. எப்போதுமுதல் வானொலி வாயிலாக நாம் மனதின் குரலில் பங்கெடுத்து வருகிறோமோ, அப்போதிலிருந்து என்னால் ஒரு பாங்கினைப் பார்க்க முடிகிறது; கோடைக்காலத்தில் அதிகப்படியான கடிதங்கள், கோடை பற்றியதாக இருக்கின்றன. தேர்வுகளுக்கு முன்பாக மாணவ நண்பர்களின் கவலைகள் தொடர்பான கடிதங்கள் வருகின்றன. பண்டிகைக் காலங்களில் நமது திருவிழாக்கள், நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் தொடர்பான விஷயங்களைத் தாங்கி வருகின்றன.
அதாவது, மனதின் விஷயங்கள் பருவநிலைக்கேற்ப மாறுதலும் அடைகின்றன என்பதோடு, உண்மை என்னவென்றால், நமது மனதின் குரல் பலரது வாழ்க்கையின் பருவநிலையையே மாற்றி அமைத்திருக்கிறது. ஏன் மாறுதல் ஏற்படுத்தக் கூடாது! உங்களின் இந்த விஷயங்களில், உங்களின் இந்த அனுபவங்களில், உங்களின் இந்த எடுத்துக்காட்டுக்களில், இத்தனை கருத்தூக்கம், இத்தனை சக்தி, இத்தனை இணக்கம், தேசத்திற்காக ஏதாவது நல்லதைச் செய்ய வேண்டும் என்ற தாகம் ஆகியன பிரதிபலிக்கிறது. இவற்றில் ஒட்டுமொத்த தேசத்தின் சூழலையும் மாற்றியமைக்கும் வல்லமை அடங்கியிருக்கிறது.
உங்கள் கடிதங்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் போது, எப்படி அஸாம் மாநிலத்தின் கரீம்கஞ்ஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டுனர் அஹ்மத் அலி, தனது ஆழ்ந்த விருப்பத்தின் துணை கொண்டு, ஏழைக் குழந்தைகள் படிக்க 9 பள்ளிக்கூடங்களை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது; அந்தவேளையில் இந்த தேசத்தின் அபாரமான பேராவல் பற்றிய காட்சி கண்முன்னே விரிந்தது. கான்பூரைச் சேர்ந்த டா. அஜித் மோஹன் சௌத்ரி நடைபாதைவாழ் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறார், இலவசமாக மருந்துகளும் கொடுக்கிறார் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, இந்த தேசத்தின் சகோதரத்துவ உணர்வு என்னை வருடும் அனுபவம் எனக்கு ஏற்படுகிறது.
13 ஆண்டுகள் முன்பாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாத காரணத்தால் கோல்காத்தாவின் டாக்ஸி ஓட்டுனர் சைதுல் லஸ்கரின் சகோதரி இறக்க நேர்கிறது. சிகிச்சை பெற முடியாத காரணத்தால் எந்த ஒரு ஏழையும் இறக்கக் கூடாது என்பதற்காக, தானே ஒரு மருத்துவமனையை உருவாக்கும் உறுதியைத் தனது மனதில் அவர் பூண்டார். சைதுல் தனது இந்த இலக்கை அடைய, தனது வீட்டில் இருந்த நகைகளை விற்றார், தானமாகப் பணம் சேகரித்தார். அவரது டாக்ஸியில் பயணம் செய்யும் பயணிகள் பலர் மனமுவந்து கொடையாக பணம் அளித்தார்கள். ஒரு பொறியாளர் சகோதரி தானமாகத் தன் முதல்மாத சம்பளத்தையே அளித்தார்.
இந்த முறையில் பணத்தை சேகரித்து, 12 ஆண்டுகள் கழித்து, இறுதியில் சைதுல் லஸ்கர் மேற்கொண்ட பகீரத பிரயத்தனம் பலனை அளித்தது; இன்று அவரது இந்தத் கடுமையான உழைப்பு காரணமாக, அவரது மனவுறுதி காரணமாக, கோல்காத்தா அருகே புனரீ கிராமத்தில், 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று தயாராகி இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவின் பலம். உத்திர பிரதேசத்தின் ஒரு பெண், பல போராட்டங்களைத் தாண்டி, 125 கழிப்பறைகளைக் கட்டும் போது, அவர் மற்ற பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறார். அங்கே தாய்மை சக்தி இதமாய் பனிக்கிறது.
இப்படி ஏராளமான கருத்தூக்கம் அளிக்கும் ஊற்றுக்கள் எனது தேசத்திற்கு அறிமுகமாய், அடையாளமாய் மிளிர்கின்றன. இன்று உலகம் முழுவதும் பாரதத்தைப் பார்க்கும் பார்வையே மாறியிருக்கிறது. இன்று, பாரதத்தின் பெயரை மிகுந்த மரியாதையோடு உச்சரிக்கும் போது, இதன் பின்னே பாரத அன்னையின் இந்தக் ஈடிலாச் செல்வங்களின் ஒப்பற்ற செயல்கள் பொதிந்து கிடக்கின்றன. இன்று நாடு முழுவதிலும், இளைஞர்களிடத்தில், பெண்களிடத்தில், பிற்படுத்தப் பட்டவர்களிடத்தில், ஏழைகளிடத்தில், மத்தியத்தட்டு மக்களிடத்தில் என, ஒவ்வொருவர் மனதிலும் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஆம்! நம்மால் முன்னேற முடியும், நமது தேசத்தால் முன்னேற்றம் காண முடியும். ஆசை-அபிலாஷைகள் நிறைந்த ஒரு தன்னம்பிக்கையுடன்கூடிய, ஆக்கப்பூர்வமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த தன்னம்பிக்கை தான், இந்த ஆக்கப்பூர்வமான உணர்வு தான், புதிய இந்தியா என்ற நமது கனவை நனவாக்கும், மனவுறுதியை மெய்ப்பிக்கும்.
என் நெஞ்சம் நிறை நாட்டு மக்களே, இனிவரும் மாதங்கள் விவசாய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் மகத்துவம் நிறைந்தவையாக இருக்கும். இதன் காரணமாகத் தான் ஏராளமான கடிதங்கள் விவசாயம் தொடர்பானவையாகவே வந்திருக்கின்றன. இந்த முறை நான் தூர்தர்ஷனின் DD Kisan Channelஇல் விவசாயிகளுடன் நடைபெறும் விவாதங்களின் காணொளியை கேட்டுப் பெற்றுப் பார்த்த போது, தூர்தர்ஷனின் DD Kisan சேனலோடு ஒவ்வொரு விவசாயியும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும், அதைப் பார்க்க வேண்டும், அங்கே காட்டப்படும் பிரயோகங்களைத் தங்கள் வயல்களில் அமல் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
காந்தியடிகள் ஆகட்டும், சாஸ்த்ரி அவர்கள் ஆகட்டும், லோஹியா அவர்கள் ஆகட்டும், சௌத்ரி சரண் சிங் ஆகட்டும், அல்லது சௌத்ரி தேவிலால் ஆகட்டும் – அனைவரும் விவசாயம், விவசாயி ஆகியோரை தேசத்தின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாகவே கருதி வந்திருக்கிறார்கள்.
மண், வயல், களஞ்சியம், விவசாயி ஆகியவைமீது அண்ணலுக்கு எத்தனை ஈடுபாடு இருந்தது என்பதை அவரது இந்த வரிகள் துலக்கிக் காட்டும் – ‘To forget how to dig the earth and to tend the soil, is to forget ourselves.’ அதாவது, நிலத்தைத் தோண்டுவது, மண்ணைப் பராமரிப்புது ஆகியவற்றை நாம் மறந்து போனால், அது நம்மை நாமே மறப்பதற்கு ஒப்பாகும் என்பதே இதன் பொருள்.
இதைப் போலவே லால் பஹாதுர் சாஸ்த்ரி அவர்களும் மரம், செடி, தாவரங்களைப் பாதுகாப்பது, சிறப்பான விவசாய அமைப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து அடிக்கடி விரித்துப் பேசுவதுண்டு. டா. ராம் மனோஹர் லோஹியா நமது விவசாயிகளுக்கான சிறப்பான வருமானம், சிறப்பான நீர்ப்பாஸன வசதிகள், இவற்றையெல்லாம் உறுதி செய்யவும், உணவு, பால் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க, பெரிய அளவிலான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். 1979ஆம் ஆண்டு தனது உரையில் சௌத்ரி சரண் சிங் அவர்கள் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, புதிய கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் தேவை குறித்து வலுகூட்டினார்.
கடந்த நாட்களில் தில்லியில் நடைபெற்ற விவசாய மேம்பாட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே விவசாய சகோதர சகோதரிகள், விஞ்ஞானிகள் ஆகியோருடன் உரையாடிய போது, விவசாயம் தொடர்பான பல அனுபவங்களைத் தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது, விவசாயத் துறையோடு தொடர்புடைய கண்டுபிடிப்புக்கள் பற்றி அறிந்து கொள்வது ஆகிய இவையனைத்தும் எனக்கு ஒரு சுகமான அனுபவமாக இருந்தது; ஆனால் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம், மேகாலயாவும், அங்குவாழும் விவசாயிகளின் கடும் உழைப்பும்தான்.
குறைவான நிலப்பகுதி கொண்ட இந்த பிரதேசம், மிகப்பெரிய பணியை ஆற்றியிருக்கிறது. மேகாலயாவைச் சேர்ந்த நமது விவசாயிகள் 2015-16ஆம் ஆண்டில், கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, மகசூலில் சாதனை படைத்திருக்கிறார்கள். இலக்கு தீர்மானிக்கப்பட்டு விட்டால், ஊக்கம் நிறைந்திருக்குமானால், மனவுறுதி ஆழமாக இருக்குமானால், சாதித்துக் காட்ட முடியும், சாதித்தும் காட்டியிருக்கிறார்கள்.
இன்று விவசாயிகளின் உழைப்பிற்கு தொழில்நுட்பமும் கைகொடுத்து வருகிறது, இதன் காரணமாக விவசாய உற்பத்தியாளர்களுக்கு கணிசமான பலம் கிட்டி வருகிறது. என்னிடத்தில் வந்திருக்கும் கடிதங்களில் பல, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் MSP-குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றியே இருக்கிறது, இதுபற்றி நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உகந்த விலை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான பெரியதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது அறிவிக்கப்பட்ட விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை, அவற்றிற்கான செலவினத்தை விட ஒண்ணரை பங்கு என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இதை விரிவான முறையில் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதரவுவிலையை எட்ட என்னென்ன செலவினங்கள் சேர்க்கப்படுமென்றால், அதில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள், அவர்களின் ஊதியம், விவசாயிகளின் கால்நடைகள், இயந்திரம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்படும் கால்நடைகள் அல்லது இயந்திரத்தின் செலவினம், விதைகளின் விலை, பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துவிதமான உரங்களுக்கான செலவினம், நீர்பாசனத்துக்கான செலவினம், மாநில அரசுக்கு செலுத்தப்பட்ட நிலவரி, வேலை மூலதனத்திற்கு செலுத்தப்பட்ட வட்டி, நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தால், அதற்குண்டான வாடகை மட்டுமல்ல, தானே உழைக்கும் விவசாயி அல்லது அவரது குடும்பத்தில் விவசாயத்தில் அவருக்குத் துணைபுரிவோர், அதற்கான மதிப்பும் உற்பத்திச் செலவினத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதைத் தவிர, விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசத்தில் விவசாய சந்தைப்படுத்தல் சீர்திருத்தம் மீதான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கிராமத்தில் இருக்கும் வட்டாரச் சந்தைகள், மொத்தவிலைச் சந்தைகள், உலகாயதச் சந்தையோடு இணைக்கப்படும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிக தொலைவு செல்லத் தேவையில்லாத வகையில், நாடெங்கும் 22,000 கிராமப்புறச் சந்தை களுக்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி மேம்படுத்தும் அதே வேளையில், APMCயும், e-NAM தளமும் ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒருவகையில், விளைநிலத்திலிருந்து தேசத்தின் எந்த ஒரு சந்தையோடும் இணைப்பு – இப்படிப்பட்டதொரு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
என் அன்புநிறை நாட்டுமக்களே, இந்த ஆண்டு காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் மஹோத்ஸவத்தின் தொடக்கம். இது வரலாற்றுபூர்வமானதொரு சமயம். தேசம் இந்த உற்சவத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்? தூய்மையான பாரதம் என்பது நமது மனவுறுதி, இதைத் தவிர, 125 கோடி நாட்டுமக்களும் தோளோடு தோள் சேர்ந்து எப்படி காந்தியடிகளுக்கு மிகச் சிறப்பான வகையில் நமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்க முடியும்? புதிய-புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா? புதிய-புதிய வழிவகைகளை அமைக்க முடியுமா?
உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் MyGov வாயிலாக இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘காந்தி 150’இன் சின்னம் என்னவாக இருக்கலாம்? கோஷம் என்னவாக இருக்க முடியும்? இவற்றைப் பற்றி உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நாமனைவருமாக இணைந்து அண்ணலின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு அஞ்சலியைச் செலுத்துவோம், அண்ணலை மனதில் இருத்தி உத்வேகம் பெறுவோம், நமது தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வோம்.
ஃபோன் – வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே… நான் குட்காவிலிருந்து ப்ரீத்தி சதுர்வேதி பேசுகிறேன்… பிரதமர் அவர்களே, தூய்மை இந்தியா இயக்கத்தை வெற்றிகரமானதொரு இயக்கமாக நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள், இனி நாம் ஆரோக்கியமான இந்தியா இயக்கத்தையும் வெற்றிகரமானதாக ஆக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது…. இந்த இயக்கத்திற்காக நீங்கள் மக்களை, அரசுகளை, அமைப்புக்களையெல்லாம் எப்படி ஒன்றிணைக்கிறீர்கள் என்பது பற்றி கொஞ்சம் கூறுங்களேன். நன்றி.
நன்றி, நீங்கள் சரியாகச் சொன்னீர்கள், தூய்மையான பாரதமும், ஆரோக்கியமான பாரதமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யக் கூடியன என்பதை நான் ஏற்கிறேன். ஆரோக்கியத் துறையில் இன்று நாடு முழுவதும் வழக்கமான அணுகுமுறையைத் தாண்டிச் சென்று விட்டது. தேசத்தில் ஆரோக்கியம் தொடர்பான அனைத்துப் பணிகளும் முன்னர் சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பாகவே இருந்து வந்தன.
ஆனால் இப்போதோ அனைத்துத் துறைகளும், அமைச்சகங்களும் – அது தூய்மை அமைச்சகமாகட்டும், ஆயுஷ் அமைச்சகமாகட்டும், வேதிப் பொருள் மற்றும் உரங்கள் அமைச்சகமாகட்டும், நுகர்வோர் நலத்துறை அமைச்சகமாகட்டும் அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள்நல மேம்பாடு அமைச்சகமாகட்டும் அல்லது மாநில அரசுகளாகட்டும் – அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவுக்காகப் பணியாற்றி வருகிறார்கள், நோய்தடுப்பு சுகாதாரத்தோடு, குறைந்த செலவிலான ஆரோக்கியம் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறாது. நோய்தடுப்பு சுகாதாரம் மிகவும் குறைவான செலவு பிடிப்பது என்பதோடு, மிகவும் எளிமையானதும் கூட.
நாம் நோய்தடுப்பு சுகாதாரம் தொடர்பாக எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறோமோ அந்த அளவுக்கு தனிநபருக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி, சமுதாயத்துக்கும் சரி ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு முதல் தேவை, தூய்மை. நாமனைவரும் ஒரு தேசமாக உறுதி பூண்டிருக்கிறோம், இதன் விளைவாக கடந்த 4 ஆண்டுகளில் சுகாதார பாதுகாப்பு இருமடங்கு அதிகரித்து சுமார் 80 சதவீதமாகி இருக்கிறது.
இதைத் தவிர, நாடெங்கிலும் Health Wellness Centres – ஆரோக்கிய உடல்நல மையங்கள் உருவாக்கும் திசையில் பரவலான வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய்தடுப்பு ஆரோக்கிய பராமரிப்பு என்ற வகையில் யோகாஸனம், புதிய சக்தியோடு உலகெங்கிலும் தனது அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யோகம் – உடலுறுதி, உடல்நலம் ஆகிய இரண்டுக்கும் உத்திரவாதம் அளிக்கிறது.
இது நம்மனைவரின் முனைப்பில் விளைந்த பலன்; இதனால் இன்று யோகக்கலை ஒரு மக்கள் இயக்கமாக மிளிர்ந்து விட்டது, ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருக்கிறது. வரவிருக்கும் சர்வதேச யோக தினமான ஜூன் மாதம் 21ஆம் தேதிக்கு இன்னும் 100க்கும் குறைவான நாட்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த 3 சர்வதேச யோகக்கலை தினங்களில், தேசத்திலும் உலகத்தின் அனைத்து இடங்களிலும், மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். நாமும் யோகம் பயில்வோம்.
குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் யோகம் பயில உத்வேகம் அளிப்போம் என்று இந்த முறையும் நாம் உறுதி செய்து கொள்வோம். புதிய சுவாரசியமான வழிமுறைகளைக் கையாண்டு, குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து வயதினர்-பாலினரிடத்திலும், இதை மேலும் பிரபலப்படுத்த வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் நாடெங்கிலும் இருக்கும் தொலைக்காட்சிகள், மின்னூடகங்கள் ஆகியன ஆண்டு முழுக்க யோகக்கலை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்கள்; ஆனால் இப்போது தொடங்கி யோக தினம் வரை – ஒரு இயக்கமாக யோகக்கலை பற்றிய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த இயலுமா?
எனது இனிமைநிறை நாட்டுமக்களே, நான் யோகாசிரியர் அல்ல. அதே வேளையில் கண்டிப்பாக யோகக்கலையின் மாணவன்; ஆனால் சிலர் தங்களின் படைப்பாற்றல் வாயிலாக என்னை யோகாசிரியராகவே மாற்றி விட்டார்கள். நான் யோகம் பயில்வது போன்ற முப்பரிமாண காணொளிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நான் உங்களனைவருடன் இந்த காணொளியை பகிர்ந்து கொள்கிறேன்; இதன் வாயிலாக நாம் இணைந்து ஆஸனம், பிராணாயாமம் ஆகியவற்றைப் பயில்வோம்.
உடல்நல பராமரிப்பு அனைவராலும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும், சாமான்யர்களுக்கு விலை மலிவானதாகவும், சுலபமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, பரவலான வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதிலும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டு, அங்கே 800க்கும் அதிகமான மருந்துகள் மலிவான விலையில் கிடைத்து வருகின்றன.
மேலும் புதிய மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மனதின் குரல் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் – தேவைப்படும் நபர்களுக்கு இந்த மக்கள் மருந்தக மையங்கள் பற்றிய தகவலை நீங்கள் கொண்டு சேருங்கள் என்பது தான். இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். இருதய நோயாளிகளுக்கான heart stentஇன் விலை 85 சதவீதம் வரை குறைக்கப் பட்டிருக்கிறது.
மூட்டு உள்வைப்புகளின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு 50 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆயுஷ்மான் பாரதத் திட்டத்தின்படி, சுமார் 10 கோடிக் குடும்பங்கள், அதாவது சுமார் 50 கோடி குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட, ஓராண்டில் குடும்பத்துக்கு என, 5 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படவிருக்கிறது. தேசத்தில் இருக்கும் 479 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 68,000ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறப்பான சிகிச்சையும், ஆரோக்கிய வசதிகளும் கிடைக்க வேண்டி இதற்காக பல மாநிலங்களிலும் புதிய AIIMS மருத்துவமனைகள் திறக்கப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு 3 மாவட்டங்களுக்கு இடையே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்படும். 2025க்குள்ளாக, தேசம் காசநோயிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வேலை. மக்கள் ஒவ்வொருவரிடத்திலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் உதவி தேவைப்படுகிறது. காசநோயிலிருந்து விடுதலை பெற, நாமனைவரும் சமூகரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, டா. பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாள். பல ஆண்டுகள் முன்பாக டா. பாபா சாஹேப் அம்பேட்கர் பாரதத்தை