மைசூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.
மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தமிழகத்தின் போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இது சரியான அணுகுமுறை இல்லை.
காவிரி குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு திட்டம் என்றுதான் குறிப்பிடப் பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சாதகமாக அது ஆணை பிறப்பிக்கவில்லை. காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களுக்கு இடையே தனது தீர்ப்புப்படி முறையாக நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்றுதான் அது தெரிவித்தது. ஆனால் தமிழகத்தின் இத்தகைய நெருக்கடிகளுக்கும், அழுத்தம் தரும் தந்திரத்துக்கும் இடம் கொடுக்காமல், உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று கூறினார்.
மேலும், காவிரியுடன் நின்றுவிடாமல், மேகதாது அணையைக் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார் சித்தராமையா.
தமிழகத்தில் காவிரிப் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரே நாளில் என்று திட்டமிடாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருமே தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் பாஜக.,வையே சாரும் என்று பழியைப் போட்டு, மாநிலத்தில் அரசியல் செய்தார் சித்தராமையா. அடுத்து காவிரி விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிட்டு, தாம் மட்டுமே கர்நாடகத்தின் காவிரி பாதுகாவலன் என்று காட்டிக் கொள்ள பாஜக.,வை கட்டம் கட்டினார். இப்போது, தமிழக அரசியல் கட்சிகள், கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு பாஜக.,வுக்கு நெருக்கடி கொடுக்க இது போல் போராட்டங்களை நடத்துவதாக கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காவிரிப் பிரச்னையில் கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள வர்த்தகத் தொடர்புகளை திமுக., விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பலமாக எதிரொலித்துள்ள நிலையில், சித்தராமையாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.