ஹைதராபாத்: தெலுகு சினிமா உலகமே மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஜூனியர் நடிகைகளின் குரல் மிகத் தெளிவாகவும் அதிக சத்தமாகவும் கேட்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நடிகை ஸ்ரீரெட்டி துவக்கி வைத்த உரிமைக் குரல்தான்!
உன்னுடைய உள்ளாடை ட்ரான்ஸ்பரண்டாக உள்ளதா என்று ஒரு நடிகையிடம் இயக்குனர் கேட்டாராம். இந்த அவலக் குரலைக் கேட்டு தெலுகு ரசிகர்கள் ஆடித்தான் போயுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே தெலுகு திரையுலகம் கலக்கத்தில்தான் உள்ளது.
நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தன்னை பாலியல் தொந்தரவு செய்தவர்களை புகைப்படங்களோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். பாகுபலி ராணாவின் தம்பி தொடங்கி, பிரபல இயக்குனர்கள் என்று அவர் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தும் பட்டியல் நீள்கிறது. இதனால் பலர் கடும் பயத்தில் உள்ளனர். ஸ்ரீரெட்டிக்கு இதற்காக பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தொடக்கப்புள்ளி, நடிகைகள் பலருக்கு உத்வேகம் அளித்து, தங்களுக்கு பாலியல் தொல்லைகளைத் தந்தவர்கள் குறித்து வெளிப்படையாகக் கூறுவதற்கு வழி செய்திருக்கிறது.
18 வயது முதல் 40 வயது வரையிலான திரை நட்சத்திரங்களை அழைத்து அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லுமாறு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, மகளிர் என்.ஜி.ஓ., அமைப்பு ஒன்று. சோமாஜிகுடா பிரஸ் க்ளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் பலர் தங்கள் மனம் திறந்து பல விஷயங்களைச் சொன்னார்கள்.
நடிகை சந்தியா நாயுடு ஒரு சம்பவத்தைக் கூறி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தெலுகு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர், கடந்த 10 ஆண்டுகளாக எங்கே போனார் என்று தெரியாத அளவுக்கு காணாமல் போனார். இந்நிலையில் சந்தியா நாயுடு கூறியபோது, பொதுவாகவே எனக்கு அம்மா, அத்தை, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் தான் தேடி வரும். நானும் அதனை ஏற்று நடித்துக் கொடுப்பேன். படப்பிடிப்புத் தளத்தில் என்னிடம் வாங்கம்மா, போங்கம்மா என்று மரியாதையாகப் பேசும் இயக்குனர்களும் நடிகர்களும், இரவு ஆகிவிட்டால் போதும், ‘அதுக்கு வா’ என்று படுக்கைக்கு அழைப்பார்கள். ஓர் இயக்குனர், ஒருமுறை, உன்னுடைய உள்ளாடையைக் கழற்றிக் காட்டு… அது ட்ரான்ஸ்பரண்டாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும் என்றார்… என சந்தியா நாயுடு கூறிய போது, பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அபூர்வா, ஸ்ரீ ரெட்டி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினர். அவை ஒவ்வொன்றாக இப்போது வெளிவந்து, தெலுகு திரையுலகை ஆட்டம் காணச் செய்து வருகிறது!