கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பாஜக., ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி நிலவியது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனிடையே மெதுமெதுவாக வன்முறைகள் தலைதூக்கத் தொடங்கின. திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள், வாக்கு அளிக்க வந்த மக்களை விரட்டி அடித்தனர்.
பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. பாஜக., தொண்டர்களும் பதிலுக்கு வன்முறையில் இறங்கினர். சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்த மக்களை வன்முறையாளர்கள் விரட்டி அடித்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகத்தினரும் தாக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.