அமிர்தசரஸ்: பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ராணுவம் நடவடிக்கை எடுத்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் 34 ஆம் ஆண்டு தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
1984-ம் ஆண்டு ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் தலைவலியாக இருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேசன் புளூஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற்கோயிலுக்குள் சீக்கிய பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் புகுந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தத் தாக்குதலின் போது, பொற்கோயிலுக்குள் இருந்த சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடத்தியதன் 34ஆம் ஆண்டு தினத்தையொட்டி சீக்கிய தீவிரவாதிகள என கூறப்படும் தால் கல்சா அமைப்பினரால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என்று கருதப் படும் நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில், பல்வேறு வழிபாட்டு தலங்கள் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.