சாதாரண மக்களும் மன நிறைவான வகையில் மருத்துவ வசதிகளைப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பேசினார் நரேந்திர மோடி.
தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி. அடிக்கடி சென்று அவரைப் பார்த்து வரும் மோடி, இன்றும் நேரில் சென்று வாஜ்பாய் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில், முதியோருக்கான தேசிய மருத்துவ மையத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்துப் பேசினார் பிரதமர் மோடி.
அப்போது அவர், நாட்டு மக்களுக்கு இயன்ற அளவுக்கு குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம். கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்பட்டதைவிட அதிகமாக மத்திய பாஜக அரசு, புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட திட்டமிடப்பட்டு, அனுமதி வழங்கியிருக்கிறது.. என்றார்.
பின்னர், சப்தர்ஜங் மருத்துவமனையில் 555 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவையும், 500 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவையும் தொடங்கிவைத்த பிரதமர், அந்த மருத்துவமனையை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்த ரூ.1,300 கோடி செலவிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரதான கட்டடத்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதி ஒன்றையும் இணைக்கும் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதியோருக்கான தேசிய மருத்துவ மையம், ரூ.300 கோடி செலவில் அடுத்த ஒன்றரை ஆண்டில் கட்டப்படவுள்ளது.