ரேஷன் பொருள்களை 3 மாதம் தொடர்ந்து வாங்க வில்லை என்றால், குடும்ப அட்டைகளை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் தில்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாடு முடிந்த பின்னர், மாநாட்டில் விவாதிக்கப் பட்ட விவரங்கள் குறித்து செய்தியாளர்களுடன் ராம்விலாஸ் பாஸ்வான் பகிர்ந்து கொண்டபோது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும். உரிய பயனாளிகளுக்குத்தான் அவை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.
மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தேவைப்படாத குடும்ப அட்டைதாரர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய இயலும் என்றார் பாஸ்வான்.
மாநிலங்களில், பட்டினிச் சாவு ஏற்படாமல் மக்களுக்கு உணவு தானியங்களை கிடைக்கச் செய்ய இதன் மூலம் முடியும் என்று கூறிய அவர், ரேஷன் கடைகளுக்கு வந்து பொருள்களை வாங்க இயலாத நிலையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வழி செய்யுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.