
நீட் தேர்வில், தமிழ் வினாத்தாளில் குளறுபடி இருப்பதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளை, தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 தவறான கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க உத்தரவிட்டது. ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் நேற்று நடந்த விசாரணையின் போது, தமிழ் மொழிபெயர்களின் தவறாலேயே தமிழ் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதாக சிபிஎஸ்இ தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மதுரை ஹைகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.