சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள், “பிரியங்கா வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார் என்று நம்புவதாகவும், எப்போதும் இல்லாத வகையில் அவர் இந்தமுறை கட்சி செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்றும், இதனால், மற்ற எதிர்கட்சி தலைவர்கள் பிரியங்காவை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட வைக்கக் கோரி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். கடந்த முறை பிரதமர் வேட்பாளரான மோடியை வாரணாசியில் எதிர்த்த ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது நிலை பெற்றார். எனவே, வரும் தேர்தலில் ஆம் ஆத்மி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ், மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பவில்லை எனக் கருதப்படுகிறது. அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் சார்பில் ஒரு உறுதியான வேட்பாளரை போட்டியிட வைக்க விரும்புகின்றனர்.