கிராமங்களில் பெருமளவு புழக்கத்தில் இருக்கும் பிம் ஆப் (BHIM UPI) ரூபே ஆப் (Rupay) ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.100 வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்று ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கலந்தாய்வுக் கூட்டம் தில்லியில் நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்துபவர்களுக்கு 20% திருப்பித் தரப்படும் என பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் கிராமங்களில் பெருமளவு புழக்கத்தில் இருக்கும் பீம் ஆப் (BHIM UPI) மற்றும் ரூபே ஆப் (Rupay) போன்றவற்றின் மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிக பட்சம் ரூ.100 வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை சோதனை முயற்சியாக செய்து பார்க்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா தலைமை வகிக்க, தில்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா மற்றும் கேரள, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் இருப்பர் என்று கூறப்பட்டுள்ளது.