குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து 120 கி.மீ., தொலைவிலுள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002ஆம் ஆண்டு பிப்.27 அன்று சபர்மதி ரயிலின் எஸ்6 பெட்டி, வெளியில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் ராம சேவகர்கள் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதற்குப் பின்னர் நடந்த குஜராத் கலவரம் ஆகியவை தொடர்பான வழக்குகள் தனித்தனியே விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 63 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 31 பேரில் 11 பேருக்கு மரணதண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளில் சிலர், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இதன் மீதான விசாரணை குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டு கடந்த வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, குற்றவாளிகளில் 6 பேர் தலைமறைவாயினர். சில நாள்களுக்குப் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் மூவரை விடுவித்து உத்தரவிடப்பட்டது. 6 பேரில் ஒருவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
முன்னர், லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக தாங்களாவே ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, ரயில் எரிப்பு வெளியில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை, ரயிலில் வந்தவர்கள் தாங்களாகவே தங்களை எரித்துக் கொண்டார்கள் என்று ஒரு அறிக்கையும், இது திட்டமிட்ட சதி அல்ல, ஒரு விபத்து என்றும் அரசியல் செய்யப் பட்டது. ஆனால், நீதிமன்ற தீர்ப்புகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட மலின அரசியல் வெளிச்சத்துக்கு வந்தது!