சென்னையில் இருந்து நேற்று மாலை தில்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசித்தார்.
இன்று காலை தில்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப் பட்டது. பின்னர் பிரதமர் இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, காலை 9.45 மணி அளவில் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார். உடமைகளுக்கும், வேளாண்மைக்கும், மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் ஏற்பட்டுள்ள சேதங்களையும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மீட்பு, சீரமைப்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர், பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.
தமிழகத்துக்கான நிவாரண நிதியாக முதல் கட்டமாக 13 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வர்தா, ஒக்கி புயல் பாதிப்புகளுக்கான நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்குமாறும் மோடியிடம் அவர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்புமாறு பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி! அப்போது அவர்,
பிரதமர் வீட்டில் நடந்த சந்திப்பின்போது, கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விளக்கினேன். சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைக்கப் பட்டது.
பிரதமர் மோடியிடம் புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். புயல் நிவாரண நிதிக்கு முதற்கட்டமாக ரூ.1500 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். கஜா புயல் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு, பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளேன்.
சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவை விரைந்து அனுப்புவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; புயலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு; அதிமுக அரசை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன!
நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர், குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர் என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.