மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக, கேரள காவல் துறையை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது.
நேற்று சபரிமலை செல்லும் வழியில் கேரள போலீஸாரால் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப் பட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். பின்னர் அவர் கேரள அரசு பஸ்ஸிலேயே பம்பைக்கு பயணம் செய்தார். பம்பையில் கேரள அரசு பஸ் நிலையத்திற்கு சென்ற பொன் ராதாகிருஷ்ணன் அங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கிருந்த பக்தர்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது அவர்கள், தாங்கள் நிலக்கல்லில் இருந்து 20 கி.மீ.க்கும் மேல் பம்பைக்கு நடந்து வருவதாகக் கூறினர். மேலும், குழந்தைகள் சிறார்களையும் அழைத்துக் கொண்டு இப்படி நடந்து வந்திருப்பதை அவர்கள் கூறியபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கண்ணீர் சிந்தினார்.
முன்னதாக, நிலக்கல்லில் அமைச்சர் எஸ்பி சதிஷ் சந்திராவிடம் தனியார் வாகனங்களுக்கு பம்பை செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்.
அதற்கு எஸ்பி மிகவும் கடினமாகவும் அதிகார தோரணையுடன் பதிலளித்தபோது நீங்கள் வாகனத்தில் சென்று அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பாக முடியும்! அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார்
அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன் ஒரு மத்திய அமைச்சரின் வாகனம் செல்வதால்தான் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று உங்களால் சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார்
அதன் பின்னர் எஸ்பி., மத்திய அமைச்சரின் வாகனம் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார். ஆனால் தனக்கு மட்டுமேயான சலுகையை ஏற்க மறுத்த பொன்ராதாகிருஷ்ணன் தான் கேரள அரசு பஸ்ஸிலேயே பம்பை செல்வதாகக் கூறினார். தன் வாகனம் மட்டும் பம்பை செல்வதற்குரிய சலுகையை தான் விரும்பவில்லை என்று கூறி உடன் வந்தவர்களுடன் கேரள அரசு பஸ் நிலையம் சென்றார்.
பின்னர் பம்பைக்கு நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்ஸிலேயே பயணம் செய்தார். இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குறித்து பதில் அளித்த போது மத்திய அமைச்சருக்கு உரிய முறையில் சரியாக பதில் அளித்திருக்க வேண்டும்! எஸ்பி வரம்பு மீறி பேசுகிறார். வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்!
அரசு பஸ்கள் பம்பைக்கு செல்லும் போது, தனியார் வாகனங்களும் செல்ல முடியாதா? வாகன நிறுத்தம் இடவசதிதான் பிரச்னை என்றால், உடனடியாக திரும்பிவிடலாமே! நிலக்கல்லில் நிறுத்துவதற்கு வசதி இருக்கும் போது, அங்கேயே நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யலாமே! என்று கேட்டார் அமைச்சர். தொடர்ந்து, மலைச் சரிவு மண்சரிவு அபாயம் கேரள அரசு பஸ்ஸுக்கு மட்டும் இல்லையா? அதற்கும்தானே இருக்கிறது என்று கேட்ட பொன் ராதாகிருஷ்ணன், கேரள அரசு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பக்தர்களை நசுக்குவதற்கென்றே இந்த வேலைகளில் ஈடுபடுவதாகக் கூறினார்.
சபரிமலை எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது, எத்தனையோ ஆண்டுகளாக, லட்சக் கணக்கில் இங்கே வந்து செல்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து சென்றுகொண்டுதான் இருந்தது. இந்த முறை மட்டும் எப்படி போக்குவரத்து நெரிசலும், மண்சரிவும், பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்பட்டு விடும் என்று எதிர்க்கேள்வி கேட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்.
இருப்பினும் மத்திய அமைச்சரை அவமரியாதையுடன் நடத்திய கேரள காவல்துறையைக் கண்டித்து, குமரி மாவட்டத்தில் பாஜக.,வினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.