சபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா கைது செய்யப் பட்டுள்ளார்.
சமூகப் போராளியாக சித்தரிக்கப்பட்ட பாத்திமா செவ்வாய்க்கிழமை இன்று காலை பத்தனம்திட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சபரிமலைக்கு செல்வதற்காக போலீசாரின் துணையுடன் பம்பையில் இருந்து மலை ஏறினார் பாத்திமா.
ரெஹானா பாத்திமா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக ஐயப்ப பக்தர்கள் மன உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக புகார்கள் எழுப்பப்பட்டன
இந்நிலையில் கொச்சியில் இருந்து பத்தனம்திட்டா போலீசாரால் ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், பத்தனம்திட்டா டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.
அக்டோபர் மாதம் 22ஆம் தேதி பத்தனம்திட்டா போலீசார் பாத்திமா மீது ஒரு வழக்கு பதிவு செய்தனர். அதில் இருவேறு சமூகங்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாக புகார் பதியப்பட்டது. அதில் பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் பல்வேறு நபர்களின் புகார்களுக்கு உள்ளானது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் ஐயப்ப பக்தர் போன்று இவர் கறுப்பு நிற உடை அணிந்து ருத்திராட்ச மாலை அணிந்து தத்துவமசி என்று சொல்லக் கூடிய முத்திரை காட்டி அமர்ந்திருந்தார். இந்தப் படம் ஐயப்ப பக்தர்களை பெரிதும் புண்படுத்துவதாக அமைந்திருந்தது
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. சபரிமலை சம்ரக்ஷண சமிதி தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாத்திமா மீது புகார் கொடுத்து இருந்தது. இந்த புகார் பத்தனம்திட்டா மாவட்ட காவல் அதிகாரியிடம் நேரடியாக அளிக்கப்பட்டது என்று சபரிமலா சம்ரக்ஷண சமிதி செயலாளர் பத்மகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐபிசி செக்சன் 295 ஏ பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் மற்ற மதத்தினர் மீது துவேஷம் உண்டாக்கும் விதமாகவும் அமைந்திருந்தது என்ற பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டது என்று பத்தனம்திட்டா காவல் அதிகாரி சுனில்குமார் கூறினார்.
இதை அடுத்து, அக்டோபர் 30ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த முன்ஜாமின் மனுவை நவம்பர் மாதம் 16ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கேரள போலீசார் இது குறித்து விசாரித்து அறிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பாத்திமா மீண்டுமொருமுறை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார் அவர் தன்னுடன் 6 பெண்களை அழைத்துக்கொண்டு சபரிமலை சன்னிதானத்துக்கு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பேனாவுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். சபரிமலை சந்நிதானத்தில் உள்ள நடப்பந்தல் வரையில் அவரை அழைத்துக் கொண்டு வந்தனர். ஆனால், சபரிமலை சன்னிதானத்துக்கு அரை கிலோமீட்டர் முன்னதாக அவர் நிறுத்தப்பட்டார்
அப்போது அவர் ஐயப்ப பக்தர்களைப் போன்று கருப்பு நிற உடை அணிந்து இருமுடி வைத்திருந்தார். ஆனால், அந்த இருமுடி குறித்து பலத்த சர்ச்சைகள் எழுந்தன. பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஊடகங்களில் பெயர் அடிபடும் நடிகையாக உருவெடுத்த பாத்திமா பிஎஸ்என்எல் பணியாளராக இருந்தார். இந்நிலையில் பிஎஸ்என்எல் அவரை ரவிபுரம் பகுதிக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தது
தங்கள் வாடிக்கையாளர்கள் பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் பகுதியில் அவர் பணியாற்ற அமர்ந்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதி அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டிருந்தது.