புது தில்லி : வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே புதிதாக இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக டிச.6 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதனால் டிச.,9 வரை தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக சோழவரத்தில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல், ஆயக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் அமபாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.