புது தில்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தில் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று கூறிய உச்ச நீதிமன்றம், சட்ட ஆய்வு ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபடும்; சில விஷயங்களுக்காக இதில் தலையிட்டோம் என்று கூறியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்தத் தீர்ப்பினை அளித்தார்.
பிரான்ஸை சேர்ந்த, டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மேடை தேறும் கூறி வந்தார். மீடியாக்களில் பேசி வந்தார். அவரது பேச்சைப் பின்பற்றி, எதிர்க்கட்சிகளும் இது குறித்து பேசி வந்தன.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வழக்கறிஞர் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், பாஜக.,வில் வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அமர்வு இந்த வழக்கில், டிசம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் அரசின் கொள்கை முடிவுகள் சரியானதுதான். இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதும் இல்லை. முறைகேடு எதுவும் நடந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் வாங்க முடிவெடுத்தது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை.
டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை நிறுவனம் தேர்வு செய்ததில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை. வர்த்தக ரீதியாக சில நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. இந்த ஒப்பந்தம் மூலம் நிதி ஆதாயம் யாரும் பெற்றதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை – என்று கூறியது உச்ச நீதிமன்றம் .
மேலும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 பொது நல மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், மோடி ரபேல் விவகாரத்தில் வெற்றி பெற்றுள்ளார்.