பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால், இது அப்படி ஆனதல்ல என்பது தெரியவரும்.
பொங்கல் பண்டிகை நம் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஒரு விழா. தமிழகத்தில் விசேஷமாக ஒரு சிறப்புப் பெயருடன் கொண்டாடப்படுகிறது… அவ்வளவுதான்!
தசரா விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் மேற்கு வங்காளத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்காக அதை மேற்கு வங்க விழா என்று யாரும் கூறுவது இல்லை.
விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக அதை மகாராஷ்டிரா மாநில விழா என்று சொல்வது பொருத்தமற்றது.
பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக சிறப்பு அம்சங்களுடன் கொண்டாடப் பட்டாலும், இது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவின் அம்சமே! வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இந்தத் திருநாள் பாரம்பரியமும் பண்பாடும் கொண்ட மக்களால் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப், தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ’லோரி’
அசாமில் ’போஹாலி பிஹு’
பிகார் மற்றும் ஜார்கண்ட் ’சக்ராத்’
மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ’சங்கராந்தி’
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ’உத்தராயன்’
நேபாளத்தில் ’மாகி’, ’மாகே சங்கராந்தி’, ’மாகே சகாராதி’ என்கிற பெயர்களில்
தாய்லாந்தில் ’சொங்க்ரான்’
லாவோஸ் மக்களால் ’பி மா லாவ்’
மியான்மரில் ’திங்க்யான்’ என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இது அறுவடைத் திருநாளின் ஆரம்பம். இங்கே சூரியன் தெய்வம். சூரியன் மகர மாதமாகிய தை மாதத்தில் தன் தேர்க்காலின் போக்கை மாற்றிக் கொள்கிறான். உத்தராயண புண்யகாலம் என்று சிறப்பிடம் பெறுகிறது வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில்!