திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் மோடியுடன் வழிபாடு நடத்த வெகு ஆர்வத்துடன் இருந்தார் எம்.பி., சசிதரூர். ஆனால், மோடியுடன் கோயிலுக்குள் ‘கெத்’தாகச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படாததால், ஏமாற்றத்தில் புலம்பித் தள்ளியுள்ளார் டிவிட்டர் பதிவில்!
ஒருநாள் பயணமாக நேற்று (ஜன.,15) கேரளா வந்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் கேரள ஆளுநர் சதாசிவம், மாநில தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் சென்றனர்.
ஆனால் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி., சசிதரூர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை!
இது தொடர்பாக திருவனந்தபுரம் தொகுதி எம்பி., சசிதரூர் பிரதமர் அலுவலகம் மற்றும் பாஜக.,வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது டிவிட்டர் பதிவில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்து, அவரது ஏமாற்றத்தைக் கூறுவதாக அமைந்திருந்தது.
பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் தரிசனம் மேற்கொண்ட நேரத்தில் உள்ளூர் எம்பி., எம்எல்ஏ, மேயருக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. எங்களின் பெயர்களை தரிசன பட்டியலில் இருந்து பிரதமர் அலுவலகம் நீக்கி உள்ளது. பாஜக., கடவுளைக் கூட அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் வழிபாடு நடத்தும் சமயத்தில் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என நினைக்கிறார்கள் என்று எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தில் கிழக்கு நுழைவு வாயிலில் புதிய மேற்கூரை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சசிதரூர், கேரள முதல்வர் பிணராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்; ஆனால், பத்மநாப ஸ்வாமியை தரிசிக்க சசிதரூர் உடன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.