சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் – மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்
மேற்குவங்க அரசு 2013 ஆண்டு சாரதா சிட் நிதி மோசடியை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்தக் குழுவிற்கு ராஜீவ் குமார் தலைமை வகித்தார். இந்தச் சிறப்பு விசாரணை குழு சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் நிதி மோசடியை விசாரிக்க அமைக்கப்பட்டது.
இக்குழுவிற்கு தலைமை வகித்த ராஜீவ் குமார், இந்த மோசடி விசாரணையை மிகவும் தாமதப்படுத்தியதாகவும் இந்த மோசடியை நீர்த்துபோகச் செய்யும் விதமாக செயல்பட்டதாகவும் கூறி மத்திய புலனாய்வு அமைப்பு இவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் ராஜீவ் குமார் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனால் ராஜீவ் குமார் மத்திய புலனாய்வு அமைப்பின் ‘உடனடி கைது’ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் தெரியவந்தன. அத்துடன், கொல்கத்தாவில் நடந்த தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திலும் ராஜீவ் குமார் கலந்து கொள்ளவில்லை. இதனால் சிட் நிதி மோசடியை நீர்த்துப்போகச் செய்த கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் தற்போது தலைமறைவாக உள்ளார் என சிபிஐ தெரிவித்தது.
சாரதா ஊழல் முறைகேடுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தப்பிக்கவிட்ட புகாரில், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய சிபிஐ முயற்சி மேற்கொண்டது.
இதற்காக, தெற்கு கொல்கத்தாவில் உள்ள காவல் ஆணையரின் வீட்டிற்கு அவரை சிபிஐ அதிகாரிகள் தேடிச் சென்றனர். ஆனால், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.
மாநில அரசின் அனுமதியின்றி ஆணையரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என முதல்வர் மம்தா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மம்தா உத்தரவை அடுத்து, காவல் துறையினரும் சிபிஐ அதிகாரிகளைத் தடுத்து திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றுள்ளார். அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை செய்து வருகிறார். மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா மேயர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சி பி ஐ vs காவல்துறை...
நள்ளிரவு நாடகத்தில் திருப்புமுனைகள்
- கொல்கத்தாவில் மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்தியது.
- நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ திட்டம்.
- சிபிஐ குழுவை காவல்நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
- கொல்கத்தாவில் 5 சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்து மேற்குவங்க போலீஸ் அதிரடி.
- சி.பி.ஐ. இணை இயக்குனரையும் கைது செய்ய மேற்கு வங்க போலீஸ் தீவிரம்.
- கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தையே தன்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கொல்கத்தா போலீஸ்.
- முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையர் வீட்டிற்கு வருகை.
- கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, டிஜிபி ஆலோசனை.
- கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு அருகே ஏராளமான போலீசார் குவிப்பு.
- கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹாக்கிம் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு வருகை.
- கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்ணா போராட்டம் – மம்தா அதிரடி அறிவிப்பு.
- பிரதமர் மோடியின் அரசு மேற்கு வங்கத்தில் ஆராஜகத்தை பரப்புகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர்.
- உலகத்திலேயே சிறந்த போலீஸ் அதிகாரி கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார்தான்.
- நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
- மேற்குவங்கத்தை அழிக்க பாஜக சித்ரவதை செய்கிறது – கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய பின்னர் முதல் மம்தா பேட்டி.
- மேற்கு வங்க மாநில காவல் ஆணையரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மெட்ரோ சானல் பகுதியில் மம்தா பானர்ஜி தர்ணா.
இதனிடையே கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை முறையிட சிபிஐ முடிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் நடக்கும் விவகாரங்கள் கண்டனத்திற்குரியவை; அரசியலமைப்பை பாதுகாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பக்கம் துணை நிற்போம் – சந்திரபாபு நாயுடு ட்வீட்
பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் திங்கட் கிழமை தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து, தங்கள் கட்சியின் பேரணிக்கு அனுமதி தராதது தொடர்பாக மேற்கு வங்க அரசு மீது புகார் அளிக்கவுள்ளனர்
கொல்கத்தாவில் மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேசினேன்; பிரதமர் மோடி, அமித்ஷாவின் நடவடிக்கைகள் வினோதமாகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் உள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்
கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு! பாஜக ஆட்சியில், அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி பறிபோவதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, ராகுல்காந்தி, ஓமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, மாயாவதி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்தனர்.
சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் அறிவிப்பு
5 சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்குவங்க ஆளுநரை சந்திக்க நேரம் கோரியது சிபிஐ
சாரதா சீட் பண்டு ஊழலை ஆவணங்களுடன் விசாரிக்க மத்திய சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசைக்கொண்டு சிறைபிடிப்பு. இது மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் சர்வாதிகார போக்கை காண்பிக்கிறது – தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சனம்
* கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை 13 நாட்களாக தேடிவருகிறோம்.அவர் ஆதாரங்களை அழித்ததற்கான ஆதாரங்களுடன் அவரை விசாரிக்கவே அவரது வீட்டிற்கு வந்தோம். காவல்துறை எங்களை கைது செய்தது. பணி செய்ய விடாமல் தடுக்கும் மேற்குவங்க அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம் – சிபிஐ