தமிழகத்தில், கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றம் மற்றும் பிரசாரத்தை தடுத்து நிறுத்தி, வாக்குவாதம் செய்தார் என்றும், இஸ்லாமியரின் குல்லாவை எடுத்து தான் அணிந்துகொண்டு, அந்த இஸ்லாமியருக்கு விபூதி பூசி விட்டார் என்றும் கூறப்பட்ட ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., என்று இந்து இயக்கப் பிரமுகர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர். ஆனால், இந்து அமைப்புகளில் இல்லாத பாமக., வைச் சேர்ந்த ராமலிங்கம், வாக்குவாதம் செய்து, அந்த வீடியோ சமூகத் தளங்களில் பரவிய நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அனுதாபத்தையும் அதிர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்னமும் கொலையாளிகள் யார் என்று அடையாளம் காணப்படாத நிலையில் நிகழ்ந்த சம்பவத்தையும், ராமலிங்கத்தின் மகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப் படுபவர்கள் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ராமலிங்கம் கொலை குறித்த கண்டனக் கூட்டங்கள் வட இந்தியாவிலும் பரவலாக நடைபெற்று வருகின்றன. தில்லி, உ.பி., மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் ஜார்கண்ட் அரசு இந்தப் படுகொலையின் பின் இருப்பதாகக் கூறப்படும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா – பிஎஃப்ஐ என்ற அமைப்பானது ஓர் அரசியல் சமூக அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது..
இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், சிலர் தென் இந்தியாவில் இருந்து சிரியாவிற்கு சென்று வந்துள்ளதும் அண்மைக்கால பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் மற்றும் சிறப்பு புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்பு தொடங்கப்பட்ட கேரளத்திலும் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில் கேரள டிஜிபி சுட்டிக் காட்டியதாக மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினரின் அறிக்கைகள் அடிப்படையில், ஜார்கண்ட் மாநில அரசு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளது. இந்திய குற்றவியல் சட்ட திருத்த விதி 1908இன் படி தடை விதிக்கப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அதன் தொடக்க விழாவை இங்கே நடத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தின் பகூர் மாவட்டத்தில் இதன் செயல்பாடுகள் குறிப்பிடத் தக்க அளவில் அதிகரித்தன. இந்நிலையில், மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த 2018ல் மாநில அரசு இந்த அமைப்புக்கு தடை விதித்தது ஆயினும், நீதிமன்றம் அதை நிராகரித்தது!