புது தில்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று நம்புகிறேன், அவருக்கு வாழ்த்து என்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் பாராட்டிப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய 16வது மக்களவையின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சித் தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர். அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான 79 வயது நிறைந்த முலாயம் சிங் யாதவ், “நான் முதலில் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அனைத்தையும் மிக நன்றாகக் கொண்டு சென்றுள்ளார்.
நான் இங்குள்ள அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் வென்று வருவார்கள் என்று நம்புகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆக வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அனைத்துக் கட்சிகளையும் மோடி ஒருங்கிணைத்துக் கொண்டு சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து முடித்துள்ளார்: என்று புகழாரம் சூட்டினார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர் மோடி அவருக்கு புன்னகைத்தபடி நன்றி தெரிவித்தார். அனைவரும் இந்த வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்தும் சிரித்தும் மகிழ்ந்தனர். அதே நேரம், முலாயம் சிங்கின் அருகே கேமரா திரும்பிய போது, வாடிய கடுகடு முகத்துடன் சோனியா காந்தி அமர்ந்திருப்பதை கேமரா காட்டியது. அப்போது மோடி மேஜையை தட்டி, முலாயம் கருத்தை ஆமோதித்தார்.
உத்தரப் பிரதேசத்தில், முலாயம் சிங் யாதவின் மகன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் கைகோத்து தேர்தலை சந்திக்கின்றனர். மோடிக்கு எதிரான அரசியலிலும் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அரசியலிலும் ஈடுபட்டுள்ள அகிலேஷின் தந்தை முலாயம் சிங், மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற தனது ஆசையை அலங்கார வார்த்தையாக அல்லாமல், உள்ளார்ந்த வார்த்தையாக வெளிப்படுத்தியுள்ளார். இது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.