போர் போர் போர் என்று போர் பரணி பாடுகிறார் பாபா ராம்தேவ். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போதாவது போர் தொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் யோகா குரு பாபா ராம்தேவ்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பு உடனடியாக பொறுப்பேற்றது. ஆயினும், பாகிஸ்தான் அரசு, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்தால் அதற்கான ஆதாரங்களை அளியுங்கள் என்று கூறியிருக்க்கிறது. இதனிடையே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், சுமார் 70 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையில் இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோரை இந்தியா இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
மேலும், இந்த விஷயத்தில் இனியும் இந்தியா பொறுமை காக்கமுடியாது எனத் தெரிவித்த அவர், போரின் வாயிலாக பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டுவது தான் சரியான தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.