காஷ்மீரின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, சிஆர்பிஎப் வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர்.
டிரால் பகுதியில் விடிய விடிய நீடித்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையையொட்டி, அந்தப் பகுதியில் மொபைல் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.