புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்டிய அதிரடித் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடியும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் பாஜக.,வுக்கு கர்நாடகத்தில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று எடியூரப்பா சொன்னது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. ஊடகங்களில் இது அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்ட கருத்து என்று பொங்கித் தீர்த்தார்கள்.
ஆனால் அதே ஊடகங்கள், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு கூடுதலாக 12 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் வெளியிட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் விமானப்படைத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு சிஎன்எக்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அதில்…
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
அதேநேரம் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும், சமாஜ்வாதி 18 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், இந்தக் கூட்டணியில் உள்ள அஜித் சிங்கின் கட்சி மற்றும் அப்னா தளம் கட்சிகள் தலா ஓரிடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரியவந்துள்ளது.
அதேநேரம் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தற்போது காங்கிரஸுக்கும் ஆதரவு அதிகரித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. பாஜக கூட்டணி 29 இடங்களில் மட்டுமே வெல்லும் என கூறப் பட்டது.