இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நிரவ் மோடிக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதை அடுத்து அவர் கைதாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடினார் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி! இவர், லண்டனில் வசித்து வருவதாக அந்நாட்டு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது.
இந்தியாவில், நிரவ் மோடி மீது சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியன வழக்கு பதிவு செய்து, விசாரித்து வரும் நிலையில், சர்வதேச போலீஸான .’இன்டர்போல்’ அமைப்பு நீரவ் மோடியை ஒப்படைக்கக் கோரும் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளது.
நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்ததாம். இதனை, அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
எனவே, நிரவ் மோடி எந்த நேரமும் கைது செய்யப் படுவார் என்று கூறப் படுகிறது.