காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது குடும்பத் தொகுதியான அமேதியில் மட்டுமல்லாது, கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.
முதல் இரு கட்ட வாக்குப் பதிவுகளுக்கான வேட்புமனு இறுதி செய்வது நிறைவடைந்துள்ள நிலையில் ராகுல் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. .அதற்கு ஏற்ப அவரை கேரளம் வயநாடு தொகுதியில் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்தன.
காரணம், ராகுலின் அமேதி தொகுதியில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், காங்கிரஸார் மேலும் ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். கட்சித் தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல என்றும் பலரும் அவ்வாறு போட்டியிட்டிருக்கிறார்கள் என்றும் ராகுலுக்காக சமாதானம் கூறப் பட்டது.
அமேதி தொகுதியில் பாஜக.,வின் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோற்றாலும் அந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்திருக்கிறார். அடிக்கடி தொகுதிக்கு பயணம் செய்து, தொகுதி மக்களுடன் நெருக்கம் காட்டியிருக்கிறார் என்பதால், ஸ்மிருதி இரானி வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது.
எனவே, ராகுல் போட்டியிட மிகவும் சாதகமான தொகுதி வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அப்போது, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் முஸ்லிம்கள் வாக்குகள் அதிகம் என்பதால், அதை நம்பி களத்தில் இறங்க அறிவுரை கூறப்பட்டது. .ஆனால் அதற்கு ஆளும் கம்யூனிஸ்ட்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனராம். கேரளத்தை தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது கம்யூனிஸ்ட் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ஏகே அந்தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.
வயநாட்டில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை நம்பியே காங்கிரஸ் களத்தில் இறங்குகிறது. ஆயினும், இரு தொகுதிகளில் போட்டியிடும் ராகுல், இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அமேதி தொகுதி தங்கள் குடும்பத் தொகுதி என்ற நிலையில் அதையே தக்க வைத்துக் கொள்வார் என்றும், வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார் என்றும் இப்போதே குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.