மின்னணு வாக்குபதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் கடமை என்று, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான தங்களது நம்பகத்தன்மை குறித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளன. இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
முன்னதாக, தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசு அமைப்புகள் நன்றாக உள்ளன. இந்த அமைப்புகள் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. மோசமான தொழிலாளியே தனது பொருட்கள் மீது கோபப்படுவார். சிறந்த தொழிலாளி தன்னிடம் உள்ள பொருளை எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியும் என சிந்திப்பார் என்பது எனது நம்பிக்கை.
அரசு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால் இந்த நாட்டில் அரசு அமைப்புகள் முன்னரே நன்றாக செயல்பட்டு வந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு தேர்தல்களை ஒழுங்காக நடத்திய தேர்தல் ஆணையம்தான் காரணம். தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போது இருக்கும் தேர்தல் ஆணையர் வரை, அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
அனைவரும் நிர்வாக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாம் விமர்சிக்க முடியாது. இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த முறை 67.3 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் ஆகும். நீண்ட நாள் கழித்து ஒரு குடிமகனாக நானும் ஓட்டுப் போட்டேன் என்று கூறியிருந்தார் பிரணாப் முகர்ஜி.
இருப்பினும், தேர்தல் ஆணையம் மற்றும் அதன் செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு தலைப் பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்து ஒரு நிகழ்ச்சியில் பேசி விட்டு வந்த பின்னர், தற்போது, தனது அறிக்கையின் மூலம், தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த நம்பகத்தன்மையை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.