மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதால், பாஜக., கூட்டணிக் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியான 14 கருத்து கணிப்புகளில் 12 கணிப்புகள் தே.ஜ. கூட்டணிக்கு 282 இடங்கள் முதல் 365 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளதால், பாஜக.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பாஜக.,வின் வெற்றி உறுதி செய்யப்படாத நிலையிலும், பாஜக., தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இந்நிலையில், மும்பை, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில், இனிப்பு தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதை அடுத்து, பிரதமர் மோடி உருவம் பதித்த முகமூடி அணிந்து கொண்டு லட்டு உள்ளிட்ட இனிப்புகளைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்ட கோபால் ஷெட்டி ஒரு படி மேலே போய், 3 ஆயிரம் கிலோ லட்டுவுக்கு ஆர்டர் கொடுத்திருக் கிறாராம். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர்! அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று விடுவோம் என்ற எண்ணத்தில், நாளை தேர்தல் முடிவு வெளியாகும் போது லட்டுகளை பொதுமக்களுக்குக் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த இனிப்பு தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், கருத்துக் கணிப்புகள் வெளியாகும் முன் 1500 கிலோ இனிப்புக்கு ஆர்டர் செய்திருந்தனர். தற்போது மேலும் 2000 கிலோ இனிப்புக்கு ஆர்டர் செய்திருக்கின்றனர்… என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கடந்த 2014ல் பிரதமர் ஆன மோடி, மீண்டும் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, வியாழக்கிழமை நாளை வாக்குகள் எண்ணப்படுகிறது. பெரும்பாலான முடிவுகள் மாலைக்குள் வெளியாகி விடும் என்று கூறப் படுகிறது.