நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.
இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.
#தேர்தல் முடிவுகள் 2019 : முன்னிலை நிலவரம்!
தொடக்க கட்ட காலை 9 மணி நிலவரப் படி, திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் முன்னிலை
பெற்றுள்ளார்.
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை பெற்றுள்ளார்.
கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை
பெற்று வருகிறார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைந்துள்ளார். ஸ்மிருதி இரானி முன்னிலை பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் – 17 இடங்களில் திமுக முன்னிலையும் அதிமுக 3 இடத்தில் முன்னிலையும் பெற்றுள்ளன.