மக்களவைத் தேர்தலில் பாஜக., மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றிகளுக்கு அடித்தளம் இட்ட கட்சியின் மூத்த தலைவர்களான லால் கிஷன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக., பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக., மட்டுமே தனித்து 302 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று காலை கட்சியின் மூத்த தலைவரும், இத்தகைய வெற்றிகளுக்கு அடித்தளம் இட்டவருமான லால் கிஷண் அத்வானியை அவரது
இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி இன்று பெற்றுள்ள வெற்றிக்கு காரணம், அத்வானி போன்ற மிகப்பெரிய தலைவர்கள் பல ஆண்டுகளாக கட்சியை வளர்த்ததுதான் என்று தெரிவித்தார்.
மேலும் தனது சந்திப்பு குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவிலும் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பாஜக., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் சந்தித்து ஆசி பெற்றனர். தனது இல்லத்துக்கு வந்த பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வரவேற்ற முரளி மனோகர் ஜோஷி, அவருக்கு தன் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோடி, முரளி மனோகர் ஜோஷி, மிகப்பெரும் அறிவாளி என்றும், கல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானது என்றும், தாம் உட்பட பல பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டதாகவும் டிவிட்டர் பதிவில் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னர் கடந்த தேர்தலின் போது, தனது தொகுதியான வாராணசி தொகுதியை, மோடிக்காக விட்டுக் கொடுத்து, போட்டியிட ஊக்குவித்தவர் முரளி மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத் தக்கது.