பிரதமர் மோதி பதவி ஏற்பு விழாவிற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்தா பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோதியின் அமைச்சரவை நாளை மறுநாள் மே-30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பதவி ஏற்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. இதனிடையே மோதி பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மம்தா கூறுகையில், பதவியேற்பு விழா சம்பிரதாய நிகழ்வு என்பதால் நான் பங்கேற்கிறேன் நாளை தில்லி செல்கிறேன் என்றார்.
தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் இன்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக.,வில் இணைந்தனர்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுப்ரன்ஷூ ராய், துஷார்காந்தி பட்டாச்சார்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தேவேந்திர ராய் ஆகியோரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 50 கவுன்சிலர்களும் இன்று பாஜக.,வில் இணைந்தனர்.
இது குறித்து பாஜக., பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா கூறிய போது, ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்தது போல், திரிணமுல் , கம்யூ., காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் இணைவது 7 கட்டங்களாக நடக்கும். இன்று நடந்தது முதல் கட்டம் என்றார்.