ரயில்வே ஸ்டேஷனில் அல்ல…. ரயிலுக்கு உள்ளேயே….மசாஜ் சேவை வருகிறது! ரயில்வே அதிகாரிகள் ஒரு ஒப்பந்ததாரருக்கு இந்த மசாஜ் பணியை அளித்துள்ளார்கள்.
ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூன்றில் இருந்து ஐந்து பணியாளர்கள் ரயிலில் பயணிப்பார்கள். அவர்கள் பயணிகளுக்கு மசாஜ் செய்வார்கள். அவர்களுக்கு ரயில்வே ஐடி கார்டுகள் கொடுக்கப்படும்.
இந்தியன் ரயில்வே வரலாற்றிலேயே முதல் முறையாக மசாஜ் சர்வீஸ் பாதம் மற்றும் தலைக்கு மசாஜ் செய்ய குறைந்த அளவு கட்டணம் 100 ரூபாய். அடுத்த இரு வாரங்களில் இந்த வசதிகள் தொடங்க உள்ளன.
இந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் 39 ரயில்களில் மசாஜ் வசதிகள் தொடங்குகின்றன. இதன் மூலம் ரயில்வேக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றும் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கையும் கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த சேவையில் கோல்ட் 100 ரூபாய், டைமண்ட் 200 ரூபாய், பிளாட்டினம் 300 ரூபாய் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த சேவை பகலில் மட்டுமே அளிக்கப்படும்.
இரவு 10 முதல் காலை 6 வரை மசாஜ் சேவை இருக்காது. ரயில்வே வருவாயை அதிகரிக்கச் செய்வதற்கு புதிய ஆலோசனைகளைக் கூறும்படி இந்தியன் ரயில்வே அனைத்து மண்டலங்களையும் கேட்டுக்கொண்டது. மேற்கு மண்டல ரயில்வே அதிகாரிகள் மசாஜ் சேவையை சிபாரிசு செய்தார்கள். அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.