தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்… என்று சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டத்துடன் கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு கன்னவரம் விமான நிலையத்தில் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் கிளம்பிய சந்திரபாபு நாயுடுவை கன்னவரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
முன்னாள் முதல்வரான சந்திரபாபுவின் வாகனம் நேராக விஐபி வழியே விமானம் வரை செல்லும் வசதி உள்ளது புதிதாக இதனை மாற்றி அதிகாரிகள் சந்திரபாபுவை சாதாரண பயணிகள் செல்லும் வழியே அனுப்பியதுடன், ஒவ்வொரு இடத்திலும் எல்லோரையும் போலவே சோதனையிட்டனர்!
விமான நிலையத்தில் லவுஞ்சில் இருந்து விமானம் வரை பிரத்தியேக வாகனம் ஏற்பாடு செய்யாமல் அனைவரும் செல்லும் பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்!
இந்நிலையில், விஐபி மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள சந்திரபாபுவுக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யாமல் பொது பேருந்தில் அனுப்பி வைத்தது குறித்து தெலுங்கு தேசம் கட்சி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மாநிலத்திலும் சந்திரபாபுவின் வாகன வரிசைக்கு பைலட் க்ளியரன்ஸை விலக்கி விட்டார்கள்! டிராபிக்கில் சந்திரபாபுவின் வாகனம் நின்றால் பாதுகாப்பின் படி நல்லதல்ல என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கவலைப்படுகின்றனர்
விமான நிலையத்தில் சந்திரபாபுவை இவ்வாறு சோதனையிட்டு அவமானப்படுத்தி விட்டார்கள் என்று இச்செயலை கண்டித்துள்ளார் ஆந்திராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ‘நிம்ம காயல சின ராஜப்பா’.
2014க்கு முன் சந்திரபாபு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதுபோன்று நிகழவில்லை என்றார். பகை தீர்த்துக் கொள்ளும் விதமாக இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபுவின் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங். கட்சியின் எம்.எல்.ஏ., ஜோகி ரமேஷ், தெலுங்கு தேசம் கட்சியினர் தேவையின்றி ஸீன் போடுகின்றனர் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பது, விமானநிலையத்துக்குள் வராது. எனவே விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் என்றும், தேவையில்லாமல் ஸீன் போட்டுப் பார்க்கின்றனர் டிடிபி கட்சியினர் என்றும் குற்றம் சாட்டுகிறார் ஜோகி ரமேஷ்.