பிரதமர் மோடியைப் புகழ்ந்து கருத்துகளைத் தெரிவித்ததால் சர்ச்சைக்குள்ளான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி இன்று கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து பாஜகவில் இணைந்தார்..
கேரளாவின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி(52) கடந்த 2009-ஆம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார்! பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
கடந்த மாதம் அப்துல்லா குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்துப் புகழ்ந்து எழுதியிருந்தார். மோடி காந்திய வழியில் சென்றதால்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டியும் எழுதினார்.
அப்துல்லா குட்டியின் செயல்பாடுகள் இதனால் காங்கிரஸுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தில்லிக்குச் சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்கள் அப்துல்லா குட்டியை பாஜகவில் இணையுமாறு கோரியுள்ளனர்.
இதை அடுத்து அப்துல்லா குட்டி இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார். தில்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.