கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 10 பேர் தில்லியில் பாஜக.,வில் இணைந்தனர். பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்கட்சியில் சேர்ந்தனர்.
தெலங்கானா, கர்நாடகாவைத் தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்ததாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக., ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து விலகினர். பாபு கவேல்கார், பாபுஸ் மான்சரடே, ஜெனிபர் மான்சரடே, டோனி பெர்ணாண்டஸ், பிரான்சிஸ் சில்வெரியா, பிலிபி நேரி ரோட்ரிக்ஸ், கிளாபசியோ, வில்பரெட் டீசா, நிலகாந்த் ஹலான்கர், இசிடோர் பெர்ணாண்டஸ் ஆகிய 10 பேர் காங்கிரசிலிருந்து விலகினர்.
அவர்கள் 10 பேரும் சபாநாயகரை சந்தித்து தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்கும்படி மனு அளித்தனர்.
இந்நிலையில் அவர்கள் 10 பேரும் பாஜக.,வில் இணைந்துள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக., பலம் 27 ஆக அதிகரித்துள்ளது.
சென்ற மாதம் தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 18 பேரில் 12 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியில் இணைந்தனர்.
முன்னர் வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக.,வுக்கே ஓட்டு செல்கிறது என்று புகார் கூறிக் கொண்டிருந்த காங்கிரஸார், இப்போது எந்த எம்.எல்.ஏ.,வை அழைத்து விவரம் கேட்டாலும், பாஜக.,வுக்கே ஓடுகின்றனர் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.