இமாச்சல பிரதேசத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இமாச்சலின் சோலன் பகுதி வழியாக உத்திரகாண்டிற்கு ராணுவ வீரர்கள், தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். அப்போது உணவு உண்பதற்காக சோலன் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டிருந்த அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விபத்திற்குள்ளாகி உள்ளது.இதில் 12 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
12 பொதுமக்கள், 5 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிக்காக இதுவரை 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் ஒரு குழு விரைவில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. மீட்புப் பணிகள் இரவு முழுவதும் தொடர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.