இரண்டு நாள் பயணமாக வரும் ஆக.17, 18ஆம் தேதிகளில் பிரதமர் மோடி பூடான் செல்கிறார்.
கடந்த 2014ல் மோடி பதவி ஏற்றதும் முதல் பயணமாக பூடான் சென்றார். தற்போது, வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ள ஜெய்சங்கர் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடானுக்கு சென்று திரும்பியுள்ளார்.
முன்னதாக, டோக்லாம் பகுதியில் கடந்த 2017ல் சீனாவின் படைக்குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்லாமின் ஒரு பகுதி பூடானுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு சீனா உரிமை கோரி வருகிறது. 2017ம் ஆண்டில் டோக்லாம் தங்களுக்கே சொந்தம் என்று சீனா படைகளை எல்லையில் குவித்தது. இதனால் இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்தது. சுமார் இரண்டு மாத காலம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து பின்னர் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்பட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக மோடி பூடானுக்குச் செல்கிறார்.
பிரதமர் மோடியின் பூடான் பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பூடானுடன் இந்தியா ஆழமான நட்பு கொண்டிருக்கிறது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு பூடான். அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் டாக்டர் லோட்டே ஷேரிங் உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி பேசுகிறார்.
பின்னர் இந்திய உதவியில் அங்கே கட்டமைக்கப் பட்டுள்ள மங்க்டேச்சு மின் உற்பத்தி திட்டத்தைதொடங்கி வைக்கிறார். இது 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.