கர்நாடகா மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கர்நாடகத்தின் பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, கார்வார், மங்களூரு, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து அணைகள் வேகமாக நிரம்பின. மேலும், பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர். பலர் பாதுகாப்பான வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டு, உணவு கொடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் மிதந்து வந்தது ஒரு கடிதம். அது காரில் பறந்து வந்து விழுந்தது. இதனை கவனித்த நிர்மலா சீதாராமன், காரை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். இந்தக் கடிதத்தை அங்கிருந்த பெண் ஒருவர் காருக்குள் தூக்கி வீசியுள்ளார். அந்தக் கடிதத்தில் வெள்ளத்தால் வீடு இன்றி தவிக்கும் எனக்கு வீடு கட்டித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதை அடுத்து அந்தப்பெண்ணை அழைத்து பேசிய நிர்மலா, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கினார். பின்னர், ‘உங்கள் வீட்டுக்காக நீங்கள் கண்ணீர் விட வேண்டிய தேவையில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உங்களுக்கு வீடு கட்டி தரப்படும். உங்கள் பெயரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்படும்’ என உறுதி கூறினார்.
நிர்மலா சீதாராமன் பேசப் பேச அந்தப் பெண் நாணத்தால் சிரித்தார். பின்னர் உரிய அதிகாரியிடம் அந்தப் பெண்ணின் கையாலேயே மனுவாக அளிக்கச் செய்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெருந்தன்மை மிக்க இந்தச் செயல் சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.