தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். அதை அடுத்து, தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, வருவாய் வட்ட எல்லைகளை நிர்ணயிப்பது, மாவட்டத்துக்கான பகுதிகளை நிர்ணயிப்பது என்று இயங்கி வருகிறார். இந்நிலையில், புதிய மாவட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டது.
வள்ளியூரை தனி சுகாதார மாவட்டமாக அறிவித்து வள்ளியூர் அரசு மருத்துவமனையை தலைமை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்திதர வேண்டும் என்று கோரப் பட்டது.
திசையன்விளை ஒட்டியுள்ள அரசூர் பஞ்சாயத்தை திசையன்விளை தாலுகாவோடு இணைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அடுக்கடுக்காய் கோரிக்கை வைத்தார்.
இந்தக் கூட்டத்தில், ஓகே ரைட்… போகலாம். மனுவாக கொடுத்திட்டங்கல்ல. பார்த்துக்கலாம் என்று கூறி, தென்காசி மாவட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தை மனுக் கொடுக்கும் கூட்டமாக மாற்றிவிட்டார் நெல்லை ஆட்சியர் என்று சிலர் புலம்பினர்.
இதை அடுத்து, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், சங்கரன் கோயில் பகுதி முக்கிய இடம் பிடித்தது.
சங்கரன் கோவிலை தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக் கூடாது, தங்களுக்கு பேருந்து வசதி இல்லை, நெல்லை மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு பகுதியினர் கோர, மறு பாதி மக்கள் சங்கரன் கோவில் தென்காசி மாவட்டத்தில் சேர வேண்டும் என்று கோரினர்.
கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் குறித்தும் சர்ச்சைகள் ஏற்பட்டன. இங்கும் மனு கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறப் படவே, ஆட்சியரிடம் சிலர் மனுவாக தங்கள் கருத்துகளை எழுதிக் கொடுத்தனர்.