அத்தி வரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
40 ஆண்டுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் ஆக.17ம் தேதியுடன் நிறைவு பெற்றது. கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்ற இந்த அத்திவரதர் வைபவத்தை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக விவிஐபி, விஐபி, சிறப்பு தரிசன டோனர் பாஸ்கள் என பகுதி பகுதியாகப் பிரித்து பாஸ்கள் வழங்கப்பட்டன. அந்த பாஸ்களை, ஸ்கேன் செய்தபோது அதில் பல பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்ற நிலையில், அத்திவரதர் வைபவத்தில் ரூ.7 கோடி வருவாய் ஆலயத்துக்கு கிடைத்ததாக அறநிலையத்துறை தெரிவித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, போலி பாஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இவ்வாறு போலியாக பாஸ்களை அச்சடித்து விற்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிவ காஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனசேகர், திலால், மற்றொரு திலால் உள்ளிட்ட 4 பேர் மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில், ரமேஷ், அப்துல் காதர், பாலு, நௌஷத், அசோக், கலிவரதன் என 7 பேர் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.