இலங்கை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப் படுத்தும் படி, மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், தமிழகம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.!
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் 6 பேரும் கோவை பகுதிகளில் பதுங்கியிருக்கின்றனர் என்று தகவல் வெளியானது. இதனால் கோவையில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
கோவை மாநகரில் பொது இடங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பேருந்து நிலையங்கள் உள்பட பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ளதாகக் கூறப் படுகிறது. இலங்கையைச் சேர்ந்த 5 பேர் மீதம் உள்ளவர்கள் என்று உளவுத் துறை கூறியுள்ளது.
இதை அடுத்து, பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களில் 3 பேரின் படங்களை கோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் படி யாரேனும் இருந்தால் உடனடியாக எண் 100-ஐ அழைத்து தகவல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், புகைப்படத்தில் உள்ள நபர்களைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.