பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஸயீத் விருது வழங்கப்பட்டது. இதனை தனி நபருக்குக் கொடுக்கப் பட்டதை விட 130 கோடி இந்தியர்களின் கலாசார செழுமைக்கு கொடுக்கப் பட்ட விருதாகவும் கூறியுள்ளார் பிரதமர் மோடி. இதற்காக யுஏஇ அரசுக்கு தாம் நன்றி கூறுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு ஆதரவாகவும் இஸ்லாமிய நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அந்த நாடுகளை வற்புறுத்தி வரும் நேரத்தில், இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகம், பாரதப் பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரு நாட்டு நல்லுறவுக்கு பாரதப் பிரதமர் மோடி மேற்கொண்ட பணிகளை பாராட்டும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஸயீத் விருதை அறிவித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது யுஏஇ பட்டத்து இளவரசரான முகமது பின் ஸயத் அல் நஹ்யான், இந்த உயரிய விருதினை பாரதப் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவைக் கண்டிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகளை பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நேரத்தில், இந்தியாவுடனான தாங்கள் நல்லிணக்கமாகவும், இரு தரப்பு உறவுகளை வலுப் படுத்தியதற்காகவும் இந்த விருதை அளிப்பதாக யு.ஏ.இ., கூறியுள்ளது.
தற்போது, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் என மூன்று நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்சில் வாழும் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார்.
பின்னர், ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பஹ்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி. பஹ்ரைனுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது.