கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் கைது செய்யப் பட்டுள்ளார்
முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் டிகே.சிவகுமார்.
கடந்த 2017, ஆகஸ்டில் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று தில்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைகளின் போது, தில்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. மேலும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் சிக்கின.
இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமாரை தலைநகர் தில்லியில் வைத்து செவ்வாய்க்கிழமை இன்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.